ரமலான் மாத இரவு தொழுகை நடத்த சிறப்பு அனுமதி தாருங்கள்- இஸ்லாமிய அமைப்புகள்
ரமலான் மாத இரவு தொழுகைகளை நிறைவேற்ற சிறப்பு அனுமதியை தமிழக அரசுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் இஸ்லாமிய அமைப்பு தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி என்ற அறிவிப்பு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. அதுவும் முஸ்லீம்களின் புனித மாதமான ரமலானுக்கு மிகவும் நெருக்கமான காலத்தில் இந்த அறிவிப்பு முஸ்லீம்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரமலான் மாதத்தில் நடைபெறும் இரவு நேர சிறப்பு வழிபாடுகளை இந்த வருடமும் நடக்க இயலாத சூழல் இதன் காரணமாக ஏற்படும்.
கொரோனா பரவல் தடுக்கப்பட வேண்டிய ஒன்றுதான். அதே போன்று மக்களின் வாழ்வும், மத நம்பிக்கை மற்றும் வழிபாடுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே தெளிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ரமலான் மாத இரவு தொழுகைகளை நிறைவேற்ற சிறப்பு அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.