இன்று இரவு முதல் படிப்படியாக மழை குறையும்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இரவு முதல் படிப்படியாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, ராமநாதபுரம், கடலூர் , தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பிற மாவட்டங்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.
நெல்லையில் பெய்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் மணிமுத்தாறு அணையில் இருந்து 12,562 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 118 அடி உயரமுள்ள அணையில் 117 .18 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. நெல்லை வண்ணாரப்பேட்டையில் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.