‘பார்சல் மூலம் மட்டுமே தேநீர் வியாபரம்’.. மறுபரிசீலனை செய்யக்கோரி பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!

 

‘பார்சல் மூலம் மட்டுமே தேநீர் வியாபரம்’.. மறுபரிசீலனை செய்யக்கோரி பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு போடப்பட்ட போது 34 வகையான கடைகளுக்கு அரசு அனுமதி அளித்தது. அவை அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் தான் செயல்பட வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. அதன் படி, அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு விட்டன. அனுமதி அளிக்கப்படாமல் இருந்த சலூன் மற்றும் பியூட்டி பார்லர்களுக்கு கூட அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. இதனிடையே, டீக்கடைகள் மற்றும் உணவகங்களில் பார்சல் மட்டும் தான் வழங்க வேண்டும் என்றும் மக்கள் அங்கேயே சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது.

‘பார்சல் மூலம் மட்டுமே தேநீர் வியாபரம்’.. மறுபரிசீலனை செய்யக்கோரி பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!

டீக்கடைகளை திறப்பது மகிழ்ச்சி அளித்தாலும், பார்சல் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், அதனை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ” மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.
கொரனா நோய் தொற்றை அறவே இல்லாமல் செய்ய வேண்டும் என்கிற நல்லெண்ண அடிப்படையில் நடைமுறைபடுத்தி வரும் ஊரடங்கு நான்காம் கட்டத்தை எட்டி சுமார் 60நாட்களை தொட்டிருக்கும் வேளையில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள தங்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

‘பார்சல் மூலம் மட்டுமே தேநீர் வியாபரம்’.. மறுபரிசீலனை செய்யக்கோரி பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!

மேலும் தமிழகத்தில் ஊரடங்கு சுமார் 60நாட்களை கடந்து போன சூழலில் பல லட்சக்கணக்கான சிறு, குறு நடுத்தர வணிகர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும், கடைகளுக்கு வாடகை செலுத்த இயலாமலும் அல்லல்பட்டு வருவதையும் தாங்கள் நன்கறிவீர்கள்.

இந்நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் தமிழகத்தில் இருக்கும் சுமார் 1லட்சத்திற்கும் மேற்பட்ட தேனீர் கடைகளை திறக்க அனுமதி அளித்திருப்பது ஒருவகையில் மகிழ்ச்சியளித்தாலும் கூட திறக்கப்படும் தேனீர் கடைகள் முறையான சமூக இடைவெளியை பின்பற்றி பார்சல் மூலம் மட்டுமே தேனீர் விற்பனை செய்ய வேண்டும் என்கிற நிபந்தனை கடும் அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கெனவே தேனீர் கடை உரிமையாளர்கள் அவர்களின் கடைகளுக்கு வாடகை செலுத்த முடியாமலும், தங்களிடம் பணிபுரிகின்ற டீ மாஸ்டர்கள், சரக்கு மாஸ்டர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமலும் அல்லல்பட்டு வரும் சூழலில் பார்சல் மூலம் மட்டுமே தேனீர் வியாபாரம் செய்ய வேண்டும் என்கிற நிபந்தனையை பின்பற்றி தேனீர் கடைகளை திறந்து வியாபாரம் செய்தால் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாமல் கடை உரிமையாளர்களுக்கு பெருத்த நஷ்டத்தையே ஏற்படுத்தும் என்பதால் தமிழகத்தில் சுமார் 70சதவிகித தேனீர் கடைகள் திறக்காமல் பூட்டியே கிடக்கின்றன.

மேலும் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள சுமார் 30சதவிகித தேனீர் கடைகளிலும் காவல்துறையினர் தேனீர் கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது, கடைகளை பூட்டி சாவியை எடுத்துச் சென்று கடைகளை திறக்க பணம் கேட்டு மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக வேதனையைத் தந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக சென்னையின் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, அடையாறு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மேற்கண்ட நிகழ்வுகள் அரங்கேறி வருவது தேனீர் கடை உரிமையாளர்களை கவலை கொள்ள செய்திருக்கிறது. உயிரைக் கொல்லும் மது விற்பனைக்கு பாதுகாப்பளிக்கும் காவல்துறையினர் உடலுக்கு புத்துணர்ச்சியளிக்கும் தேனீர் கடைகளுக்கு பாதுகாப்பளிக்காவிட்டாலும் கூட ஒத்துழைப்பு அளித்தாலே வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் தேனீர் கடை உரிமையாளர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.

எனவே வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் தேனீர் கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தேனீர் கடைகளில் பார்சல் மூலம் மட்டுமே தேனீர் வியாபாரம் செய்ய வேண்டும் என்கிற உத்தரவை மறுபரிசீலனை செய்து தேனீர் கடைகளில் முறையான சமூக இடைவெளியோடு அமர்ந்தபடியோ அல்லது நின்று கொண்டோ வாடிக்கையாளர்கள் தேனீர் அருந்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தங்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு தேனீர் கடைகள் திறப்பின் அரசாணை மாற்றி உத்தவிடும்பட்சத்தில் பால் விற்பனை கணிசமாக உயரும் என்பதால் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களும், பால் முகவர்களும் ஓரளவிற்கு தங்களின் வாழ்வாதாரத்தை ஈடு செய்ய முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.