ஜெயலலிதா இல்ல சாவியை தமிழக அரசே வைத்திருக்கலாம்!

 

ஜெயலலிதா இல்ல சாவியை தமிழக அரசே வைத்திருக்கலாம்!

பதிவாளரிடம் ஜெயலலிதா இல்லத்தின் சாவியை ஒப்படைக்க வேண்டியதில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதை எதிர்த்து, ஜெ.வின் அண்ணன் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் போதே, ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் பணி தொடங்கியது. இதற்கு தீபா, தீபக் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியது. நினைவில்லத்திற்கான பணிகளை முடித்த அரசு, ஜன.28ம் தேதி வேதா இல்லத்தை மக்களின் பார்வைக்கு திறக்கவிருப்பதாக அறிவித்தது.

ஜெயலலிதா இல்ல சாவியை தமிழக அரசே வைத்திருக்கலாம்!

இதனால், வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு தீபா, தீபக் தரப்பில் கோரப்பட்டது. கடந்த 27ம் தேதியன்று மாலை இந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, ஜெயலலிதா இல்லத்தை திறக்க தடையில்லை என்றும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் ஜெயலலிதா இல்லத்தை திறந்த பிறகு வீட்டின் சாவியை நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஜெயலலிதா இல்ல சாவியை தமிழக அரசே வைத்திருக்கலாம்!

இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்விடம் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அரசின் மேல்முறையீட்டை இன்று விசாரித்த நீதிபதிகள், பதிவாளரிடம் சாவியை ஒப்படைக்க உத்தரவிட்ட தனி நீதிபதி ஆணைக்கு தடை விதித்தனர். ஜெயலலிதா நினைவு இல்ல சாவியை கோர்ட்டில் ஒப்படைக்க தேவை இல்லை; அரசே வைத்திருக்கலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், ஜெயலலிதா நினைவு இல்லம் மேல்முறையீட்டு வழக்கில் தீபா, தீபக்கிற்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.

மேலும், தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கு விசாரணையை பிப்ரவரி 3.ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.