குஜராத் தமிழ் பள்ளி செயல்பட தமிழக அரசு உதவி- ஸ்கோர் செய்த எடப்பாடி பழனிசாமி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்வழி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மாணவர் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், பள்ளியை மூடுவதற்கு குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்தன.
இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக கவனம் செலுத்தி, அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு அவசரமாக கடிதம் எழுதினார்.
அதில் ‘’ அகமதாபாத் நகரில் தமிழ்வழியில் நடத்தப்பட்டுவரும் பள்ளிக்கூடம், மாணவர்களின் சேர்க்கைக் குறைவு காரணமாக திடீரென மூடப்படுவது குறித்து வருத்தமடைந்தேன். இந்தப் பள்ளிக்கூடம் மூடப்பட்டால், தமிழ் மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படும். தமிழர்கள் குஜராத்தின் வளர்ச்சிக்காக உழைத்திருக்கிறார்கள். உழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். குஜராத்தில் வசிக்கும் தமிழ்ச் சிறுபான்மையினரின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்.
எனவே, நீங்கள் தலையிட்டு, அந்தப் பள்ளிக்கூடம் தொடர்ந்து நடைபெறச் செய்ய வேண்டும். அந்தப் பள்ளிக்கூடத்துக்கான முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறது. தமிழ் மொழி, சிறுபான்மையினரின் கல்வி உரிமைகளை குஜராத் அரசு பாதுகாக்கும் என நம்புகிறேன்’’ என குறிப்பிட்டிருந்தார்.
’’முதலமைச்சரின் இந்த கடிதத்திற்கு விரைவில் நல்ல பதில் கிடைக்கும்’’ என நம்பிக்கையோடு சொல்கிறார்கள் தமிழக அதிகாரிகள். மூன்றாவது மொழியாக இந்திய மொழிகளில் ஒன்றை கற்க வேண்டும் என புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. இந்த சூழலில், குஜராத் மாநிலத்தில் தமிழ் மக்களுக்கு கிடைத்து வந்த தமிழ் கற்கும் வாய்ப்பு பறிபோய்விடக்கூடாது என்கிற நோக்கத்தில் உடனடியாக செயல்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ் அறிஞர் பெருமக்கள் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.