குமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில், தங்க நகைகள் திருட்டு!

 

குமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில், தங்க நகைகள் திருட்டு!

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் புகழ்பெற்ற தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில், மாதா சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

கன்னியாகுமரியில் பழமைவாய்ந்த தூய அலங்கார உபகார மாதா ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள பழைய கோவிலில் மாதா சிலைக்கு, பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்க ஆபரணங்களை அணிவிப்பது வழக்கம். நாளை பெரிய வியாழன் கடைபிடிக்கப் படுவதை முன்னிட்டு, ஆலயத்தில் உள்ள இயேசுநாதர் சிலை திரைச்சீலையிட்டு மறைக்கப் பட்டுள்ளது.

குமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில், தங்க நகைகள் திருட்டு!

இந்த நிலையில், இன்று காலை ஆலயத்தில் உள்ள பழைய மாதா கோவிலுக்கு சென்ற பக்தர்கள், அங்கு மாதாவின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மாயமானதை கண்டு, ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர். நிர்வாகத்தினர் சென்று பார்த்தபோது மாதா கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 4 சவரன் தங்க சங்கிலி மற்றும் ஒரு ஜோடி கம்மல் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து ஆலய நிர்வாகத்தின் புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, இயேசுநாதர் பீடம் அருகே மர்மநபர் ஒருவர் மறைந்திருந்தது தெரியவந்தது. இதனால் அந்த நபர் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என கூறிய போலீசார், சிசிடிவி பதிவின் அடிப்படையில் மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.