பெண் குழந்தை மரணம் : பெற்றோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு!

 

பெண் குழந்தை மரணம் : பெற்றோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு!

மதுரை அருகே பெண் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டி பகுதியில் வசித்து வந்த தம்பதி சின்னச்சாமி – சிவப்பிரியங்கா. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகளும் 3 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களுக்கு பிறந்த 3ஆவது பெண் குழந்தை இன்று காலை திடீரென உயிரிழந்தது.

பெண் குழந்தை மரணம் : பெற்றோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு!

இரண்டு நாட்களுக்கு முன்னர் உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்ற போது குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றவுடன் குழந்தை உயிரிழந்து விட்டதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். ஆனால், குழந்தையின் முகத்தில் இருந்த காயம் மருத்துவர்களுக்கு சந்தேகத்தை தூண்டியது. உடனடியாக போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவிக்க, உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற போலீசார் குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். மூன்றாவதும் பெண் குழந்தை என்பதால் கொலை செய்யப்பட்டதா? உறவினர்கள் யாரேனும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்ற கோணத்தில் விசாரணை தொடருகிறது.