எஸ்.பி.பி. சீக்கிரம் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் : நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!
கடந்த 50 ஆண்டுகாலமாக திரை உலகில் பிரபல பின்னணிப் பாடகராக வலம் வந்து கொண்டிருப்பவர் எஸ் பி பாலசுப்பிரமணியம். இவர் கடந்த 5 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் தான் நலமாக இருப்பதாக வீடியோ வெளியிட்ட எஸ்பிபி உடல் நிலை நாளடைவில் கவலைக்கிடமானது. இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எஸ்பிபி சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவக் குழுவிடம் ஆலோசனை நடத்தினார். அதில் எஸ்பிபி-க்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது தெரிய வந்தது. தற்போது எஸ்பிபி-யின் உடல் நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Get well soon dear Balu sir pic.twitter.com/6Gxmo0tVgS
— Rajinikanth (@rajinikanth) August 17, 2020
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “50 ஆண்டுகளில் பல மொழிகளில் தனது இனிமையான குரலில் பாடி மக்களை மகிழ்வித்து கொண்டிருப்பவர் எஸ்பிபி. அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தெரியவந்தது மகிழ்ச்சியளிக்கிறது . இன்னும் தீவிர சிகிச்சையில் இருக்கிற எஸ்பிபி விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று ரஜினி உருக்கமாக கூறியுள்ளார்.