மிளகு… சளி, இருமல், ஆஸ்துமாவை விரட்டும்!

 

மிளகு… சளி, இருமல், ஆஸ்துமாவை விரட்டும்!

`பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்பது சித்த மருத்துவ வழக்கு மொழி. அதேபோல் `உழவு நட்பில்லாத நிலமும் மிளகு நட்பில்லாத கறியும் வழவழ’ என்ற முதுமொழியும் மிளகின் மகத்துவத்தை எடுத்துரைக்கின்றன. பைப்பர் நிக்ரம் (Piper nigrum) என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட மிளகு பூத்துக் காய்த்துப் படர்ந்து வளரும் கொடி இனத்தைச் சேர்ந்த தாவரமாகும்.

மிளகு… சளி, இருமல், ஆஸ்துமாவை விரட்டும்!
மிளகு:
மிளகில் மிளகு, வால்மிளகு என்ற இரு வகைகள் உள்ளன. ஆனாலும் பெரும்பாலும் மிளகுதான் பயன்பாட்டில் உள்ளது. பதப்படுத்தும் முறையின் அடிப்படையில் கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு மற்றும் பச்சை மிளகு என பல வகைகள் உள்ளன.
100 ஆண்டுகளுக்கு முன் சிலி நாட்டிலிருந்து மிளகாய் வருவதற்குமுன் காரமான சுவைக்கு மிளகுதான் பயன்படுத்தப்பட்டு வந்தது. நெஞ்சு சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் திரிகடுகத்தில் சுக்கு, திப்பிலியுடன் இடம்பெற்றிருப்பது மிளகு.

மிளகு… சளி, இருமல், ஆஸ்துமாவை விரட்டும்!

சளி, ஜலதோஷம்:
அஞ்சறைப் பெட்டிகளில் தவறாமல் இடம்பிடிக்கும் மிளகில் ரசம், சாம்பார், புளிக்குழம்பு செய்வார்கள். அசைவ உணவுகளில் காரச் சுவைக்குச் சேர்க்கிறார்கள். இது வெறுமனே உணவில் சுவை சேர்ப்பதுடன் நின்றுவிடாமல் பல்வேறு நோய்களையும் குணப்படுத்துகிறது. சளிப் பிரச்னைக்கு மிளகு நல்ல மருந்தாகும். பசும்பாலுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து தோலுரித்த 10 பூண்டுப் பற்களைச் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். அத்துடன் மிளகுத் தூள், மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி நன்றாகக் கடைந்து இரவு உறங்கப்போவதற்கு முன் குடித்தால் நெஞ்சுச் சளி விலகும்; ஜலதோஷம், மூக்கடைப்பும் விலகும்.

மிளகுத் தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் இருமல் உடனே நிற்கும். 10 துளசி இலைகளுடன் ஐந்து மிளகு சேர்த்து 200 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்தால் கோழைகட்டுதல் நீங்கும். ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் ஐந்து மிளகைச் சேர்த்து மென்று தின்று வந்தால் பிரச்னை தீரும்.

மிளகு… சளி, இருமல், ஆஸ்துமாவை விரட்டும்!
விஷக்கடி:
தேள், பூரான், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் கடித்து விட்டால் 5 மிளகுடன் ஒரு வெற்றிலை சேர்த்து மென்று சாப்பிட்டால் விஷம் ஏறாமல் தடுக்க முடியும். அதேபோல் 100 மி.லி வெற்றிலைச் சாற்றில் 35 கிராம் மிளகைச் சேர்த்து 12 மணி நேரம் ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி காலை மாலை சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால் பூரான் விஷம் இறங்கும். இந்த மருந்து சாப்பிடும்போது புளி, நல்லெண்ணெய் சேர்க்கக் கூடாது. தேள் கடிபட்டவர்கள் 20 மிளகுடன் சம அளவு தேங்காய் சேர்த்து மென்று தின்றால் விஷம் இறங்கும்.

மிளகுத் தூளுடன் வெங்காயம், உப்பு சேர்த்து தலையில் புழுவெட்டு உள்ள இடங்களில் பூசி வந்தால் முடி வளரும். முகப்பருக்களால் அவதிப்படுபவர்கள் சந்தனம், ஜாதிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்து பருக்களின்மீது பற்று போட்டு வந்தால் நாளடைவில் உதிர்ந்துவிடும். பல்வலி தொடர்பான பிரச்னைகளுக்கு மிளகுத் தூளும் சாதாரண உப்புத் தூளும் சேர்த்து பல் துலக்கினால் பலன் கிடைக்கும்.