கடலூரில் விநாயகர் சிலை அமைக்க தடை! – கலெக்டர் உத்தரவு
கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை அமைக்கவோ, நீர் நிலைகளில் கரைக்கவோ அனுமதியில்லை என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி வருகிற 22ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள இந்த காலத்தில் ஊர்வலங்கள் நடத்துவது எப்படி எந்த சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் அமைக்க, நீர் நிலைகளுக்கு கொண்டு சென்று கரைக்கத் தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாத் தொற்று காரணமாக ஊரடங்கு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். இந்த நிலையில் வருகிற 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி பொது மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவுதல், வழிபடுதல் மற்றும் விநாயகர் சிலையைக் கரைத்தல் போன்றவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. பொது மக்கள் தங்கள் வீடுகளிலேயே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த ஆண்டு பொது இடங்களில் சிலை வைப்பதை, வழிபாடு செய்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
விநாயகர் சிலைகளை பொது இடங்களில் அமைக்கக் கூடாது என்று அரசு அறிவித்து வருவதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தடையை மீறி சிலை அமைக்கப்படும் என்று சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.