விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி மறுப்பு… ஈரோட்டில் கோவில்கள் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

 

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி மறுப்பு… ஈரோட்டில் கோவில்கள் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

ஈரோடு

ஈரோட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தக் கோரி, இந்து முன்னணியினர் கோவில்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் 10-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகர் பகுதி மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டு பின்பு, அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் கரைக்கப்படும்.

இந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடக் கூடாது என அரசு அறிவித்து உள்ளது. இதற்கு இந்து முன்னணியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த கோரி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி மறுப்பு… ஈரோட்டில் கோவில்கள் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

அதன்படி, ஈரோடு இந்து முன்னணி சார்பில் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற வலியுறுத்தி, சூடம் ஏற்றி வழிபட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சக்தி முருகேஷ் முன்னிலை வகித்தார். இதேபோல் திண்டல் வேலாயுதசாமி கோவில் முன்பு இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் மாநகர் பகுதிக்கு உட்பட்ட பெரியவலசு வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம் என மாவட்டம் முழுவதும் இந்து முன்னணியினர் கோவில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.