பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடலுக்கு இறுதிச் சடங்கு தொடக்கம்!

 

பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடலுக்கு இறுதிச் சடங்கு தொடக்கம்!

மறைந்த பாடகர் எஸ்பிபி அவர்களின் உடலுக்கு இறுதிச் சடங்கு தொடங்கியிருக்கிறது.

50 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் நேற்று பிற்பகல் 1 மணி அளவில் காலமானார். கோடான கோடி ரசிகர்களும், திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று மாலை 4 மணிக்கு அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பிறகு, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் இருக்கும் பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடலுக்கு இறுதிச் சடங்கு தொடக்கம்!

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், 5 நபர்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடைபிடித்து அஞ்சலி செலுத்த போலீசார் அனுமதித்தனர். இதனால் அங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பாடும் நிலா என மக்கள் மனதில் இடம் பிடித்த எஸ்பிபி அவர்களது உடலுக்கு இறுதி அஞ்சலி தொடங்கியிருக்கிறது.

புரோகிதர்கள் இறுதிச் சடங்குகளை தொடங்கிய பின்னர் ரசிகர்கள் அஞ்சலிக்காக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் பண்ணை வீட்டில் விதைக்கப்படவிருக்கிறது ‘பாடும் நிலா’..