நாகையில் மீன் இறங்குதளம் அமைக்க நிதி ஒதுக்கீடு!
நாகை மாவட்டத்தில் மீன் இறங்குதளம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும் போது, “நாகை சின்னமேடு, கூழையாறு கிராமங்களில் கடலரிப்பினால் மீனவ கிராமங்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதனால் கடல் அரிப்பை தடுக்க சுவர்களுடன் கூடிய மீன் இறங்கு தளங்கள் அமைத்து தர அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் 2020 -21 நிதியாண்டில் விதி எண் 110-ன் கீழ் ரூ.19.46 கோடியில் கடல் அரிப்பு தடுப்புப் பணி மற்றும் கொடியம்பாளையத்தில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். தமிழக அரசு பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மீன் ஏலக்கூடம், வலை பின்னும் கூடம் கட்டப்படுவதால் கிராம மீனவர்கள் பயனடைவர்” என்றார்.
முன்னதாக கடலூர் தாழங்குடா, ராமநாதபுரம் ரோச்மாநகர் மற்றும் தங்கச்சிமடம் கிராமங்களில் கடல் அரிப்பு தடுப்புப் பணி மற்றும் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.