சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு! – அரசு திடீர் அறிவிப்பு
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உள்ளிட்ட கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளதாக சில நாட்களாக செய்தி பரவி வந்தது. ஆனால் இதை தமிழக அரசு மறுத்துவந்தது. ஊரடங்கு இல்லைவே இல்லை என்று உயர் நீதிமன்றத்திலும் கூறியது. இந்த நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் இன்று காலை ஆலோசனை நடத்தினர். அந்த கூட்டத்தில் ஊரடங்கின் அவசியம் பற்றி மருத்துவர்கள் விளக்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அப்போதே ஊரடங்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு ஜூன் 15ம் தேதி மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் வருகிற 19ம் தேதி அதிகாலை 12 மணி முதல் ஜூன் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மிஞ்சூர் பேரூராட்சி, பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலை நகர் நகராட்சி, நந்திவரம் – கூடுவாஞ்சேரி பேரூராட்சி, காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார்.