சென்னை குடிசைவாழ் பகுதி மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்!
நிவர் புயலை தொடர்ந்து தென் வங்கக்கடலில் உருவான புரெவி புயலால், தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மின்சாரம் தாக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும் பலர் உயிரிழக்க நேர்ந்தது. புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்த முதல்வர், புயல் பாதிப்படைந்த மாவட்டங்களில் நிவாரண உதவி வழங்க அமைச்சர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்தார். அதே போல, மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை குடிசை வாழ் பகுதி மக்களுக்கு டிச.13ம் தேதி வரை 3 வேளை இலவச உணவு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், முதல்வரின் உத்தரவின் படி சென்னை குடிசை வாழ் பகுதி மக்களுக்கு இன்று முதல் இலவச உணவு வழங்கப்படுகிறது. அம்மா உணவகங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் உணவு வழங்க திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் அமைச்சர் பாண்டியராஜன் மக்களுக்கு உணவு வழங்கி இத்திட்டத்தை தொடக்கி வைத்தனர். சென்னை குடிசைவாழ் பகுதிகளில் 5.3 லட்சம் குடும்பங்கள் இருக்கும் நிலையில், மொத்தம் 23 லட்சம் பேர் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.