“தனியார் மருத்துவமனைகளிலும் இலவச கொரோனா தடுப்பூசி”
முதல்வர் ஸ்டாலின் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,767 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 52 ஆயிரத்து 49ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 29 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது. இந்த சூழலில்137 மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பெரிய நிறுவனங்கள் அளிக்கும் நிதியின் மூலமாக தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் தனியார் மருத்துவமனையில் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இருப்பினும் ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் நடைமுறையில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட விலையில் தடுப்பூசி செலுத்தும் திட்டமும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்ட் தடுப்பூசி ஒரு டோஸ் 780 ரூபாய்க்கும், கோவாக்சின் தடுப்பூசி ஒரு டோஸ் 1410 ரூபாய்க்கும் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி என்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.