நள்ளிரவில் வெள்ளாடுகளை திருடிய சிறுவன் உள்பட 4 பேர் கைது

 

நள்ளிரவில் வெள்ளாடுகளை திருடிய சிறுவன் உள்பட 4 பேர் கைது

சேலம்

ஆத்தூர் அருகே நள்ளரவில் வெள்ளாடுகளை திருடிய சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த வேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஆடுகளை அடைத்துவிட்டு, வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலையில் திடீரென ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டதால் விழித்த ராஜேந்திரன், பட்டிக்கு சென்று பார்த்தார். அப்போது மர்மநபர்கள் சிலர் ஆடுகளை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர்.

நள்ளிரவில் வெள்ளாடுகளை திருடிய சிறுவன் உள்பட 4 பேர் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக வீரகனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். புகாரின் பேரில் சந்தைபேட்டை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக 2 இருசக்கர வாகனங்களில் ஆடுகளை கொண்டு வந்த சிறுவன் உள்ளிட்ட 4 பேரை மறித்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், 4 பேரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

இதில் அவர்கள் அரும்பாவூர் கிராமத்தை சேர்ந்த சரவணன்(21), சூர்யா(18), மணிகண்டன்(19) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும், 4 பேரும் வேப்பம்பூண்டியில் ஆடுகளை திருடி விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து, 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 வெள்ளாடுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்