அன்று சீட் கொடுக்கவில்லை… இன்று பதவி கொடுக்கவில்லை… திமுக, பாஜக, திமுக என மாறிமாறி சடுகுடு ஆடும் முன்னாள் எம்எல்ஏ

 

அன்று சீட் கொடுக்கவில்லை… இன்று பதவி கொடுக்கவில்லை… திமுக, பாஜக, திமுக என மாறிமாறி சடுகுடு ஆடும் முன்னாள் எம்எல்ஏ

திமுகவில் இருந்து வெளியேறிய முன்னாள் எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் சேர்ந்தார். தற்போது பாஜகவில் இருந்து வெளியேறி மீண்டும் திமுகவில் சேர்ந்துள்ளார். இவரது அரசியல் சடுகுடு ஆட்டம் மீண்டும் தொடருமா என்று கிண்டல் செய்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் வேதரத்தினம். இவர் தொடர்ந்து 4 முறை வேதாரண்யம் திமுகவின் ஒன்றியச் செயலாளராக இருந்தவர். 1996, 2001, 2006 ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று தொடர்ந்து, 15 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்தவர். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இவர் சொந்த கட்சிக்காரர்களால் ஓரம் கட்டப்பட்டார். அந்த பகுதி மக்கள் செல்வாக்குடன் இருந்து வந்த வேதரத்தினத்துக்கு சீட் கொடுக்கப்படவில்லை. வேதாரண்யம் தொகுதி கூட்டணி கட்சியான பாமகவுக்கு கொடுக்கப்பட்டது. இதனால் திமுக மீது கடும் கோபத்தில் இருந்தார் வேதரத்தினம்.

அன்று சீட் கொடுக்கவில்லை… இன்று பதவி கொடுக்கவில்லை… திமுக, பாஜக, திமுக என மாறிமாறி சடுகுடு ஆடும் முன்னாள் எம்எல்ஏ

இதையடுத்து, திமுகவில் இருந்து வெளியேறியதோடு, தனது செல்வாக்கை நிரூபிக்க முற்பட்டார். வேதாரண்யம் சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 22,625 வாக்குகளைப் பெற்று 2-வது இடம் பெற்றார். பாமக சார்பில் போட்டியிட்ட சின்னதுரை தோல்வி அடைந்தார். அதிமுக வென்றது. இதையடுத்து, பாஜக சேர வேதரத்தினம் முடிவு செய்தார். 2015ம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன், அவரை தனது கட்சிக்கு அழைத்து வந்தார். அவருக்கு 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது பாஜக. இந்த தேர்தலில் வேதரத்தினத்துக்காகப் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடியே வேதாரண்யம் வந்திருந்தார். ஆனால் அந்தத் தேர்தலிலும் அவர் தோல்வியே அடைந்தார். இருந்தாலும் 37,086 வாக்குகள் பெற்றார். இந்த நிலையில் வேதரத்தினத்துக்கு மாநில செயலாளராகப் பொறுப்பு வழங்கப்பட்டது. கட்சிப் பணியில் அவர் தீவிரம் காட்டி வந்தார்.

இதனிடையே, கடந்த ஜூலை 5-ம் தேதியன்று பாஜகவுக்குப் புதிதாக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதில் அவருக்கு மாநிலப் பொதுச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்தார் வேதரத்தினம். ஆனால் எந்த முக்கியத்துவமும் இல்லாத தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது. இதனால் அதிருப்பதி அடைந்த அவர், கட்சியில் தான் ஓரம் கட்டப்படுவதாக தனது ஆதரவாளர்களிடம் குமுறியுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட திமுக தரப்பு அவரை அணுகியுள்ளது. இதையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசியுள்ளார் வேதரத்தினம். அப்போது, ஸ்டாலின், “வந்துடுங்க பார்த்துக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

அன்று சீட் கொடுக்கவில்லை… இன்று பதவி கொடுக்கவில்லை… திமுக, பாஜக, திமுக என மாறிமாறி சடுகுடு ஆடும் முன்னாள் எம்எல்ஏ

இதையடுத்து, பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் தன்னை வேதரத்தினம் இணைத்துக் கொண்டார். நேற்று மாலை 4 மணியளவில் வேதாரண்யம் நகர திமுக அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி முறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னைத் திமுகவில் சேர்ந்து கொண்டார். அவருக்கு மாவட்டச் செயலாளர் கவுதமன், ஸ்டாலின் சார்பில் சால்வை அணிவித்துக் கட்சிக்குள் வரவேற்றார். பின்னர் அனைவரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தேர்தலில் சீட் கொடுக்காததால் திமுகவில் இருந்து வெளியேறிய முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம், பாஜகவில் சேர்ந்து கொண்டார். அங்கே, கட்சி பதவி கொடுக்காததால் தற்போது திமுகவுக்கே வந்துவிட்டார். இது எத்தனை நாட்களோ!