`காய்கறி வாங்க காரில் வந்தார்!’- நடுரோட்டில் கிரிக்கெட் வீரருக்கு சென்னை போலீஸ் ‘ஷாக்’

 

`காய்கறி வாங்க காரில் வந்தார்!’- நடுரோட்டில் கிரிக்கெட் வீரருக்கு சென்னை போலீஸ் ‘ஷாக்’

சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறி காய்கறி வாங்க காரில் சென்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின்சிங் மீது போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தோடு, காரையும் பறிமுதல் செய்தனர். நடுரோட்டில் நடந்த இந்த சம்பவம் தற்போது வெளியே தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அத்தியாவசிய பொருள்களை வாங்க வருபவர்கள், வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் நடந்தே செல்ல வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அதை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராமும் விதிக்கப்பட்டு வருகிறது.

`காய்கறி வாங்க காரில் வந்தார்!’- நடுரோட்டில் கிரிக்கெட் வீரருக்கு சென்னை போலீஸ் ‘ஷாக்’

இந்தநிலையில் கடந்த 20-ம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின்சிங், காய்கறி, மளிகை பொருள்களை வாங்க காரில் வீட்டிலிருந்து வந்துள்ளார். அப்போது கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸார் காரை வழிமறித்துள்ளனர். பின்னர் காரை ஓட்டியவர் யாரென்று தெரியாமல் எங்கு செல்கிறீர்கள், இ-பாஸ் இருக்கிறதா என்று விசாரித்துள்ளனர். அதற்கு கிரிக்கெட் வீரர் ராபின்சிங் ஆங்கிலத்தில் பதிலளித்துள்ளார். அப்போது அவரிடம் விசாரித்த போலீஸாருக்கு சரியாக புரியாமல் விழிபிதுங்கியுள்ளனர். பின்னர் தங்கள் பாணியில் காரை ஓரங்கட்டுங்கள், டிரைவிங் லைசென்ஸ் எடுங்க என கூறியுள்ளனர்.

இதையடுத்து ஊரடங்கை உத்தரவை மீறிய குற்றத்திற்காக உங்களின் காரை பறிமுதல் செய்கிறோம், மேலும் அபராதமும் விதிக்கிறோம் என்று போலீஸார் கூறியுள்ளனர். உடனே கிரிக்கெட் வீரர் ராபின்சிங், தனக்கு தெரிந்த ஒருவருக்கு போன் செய்து காரில் வரும்படி கூறியுள்ளார். அவர் வந்ததும் அந்தக் காரில் ஏறி ராபின்சிங் சென்றுள்ளார். காரை பறிமுதல் செய்த போலீஸார் சாஸ்திரி நகர் போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு போலீஸாரும் தங்களின் அன்றாட பணிகளில் ஈடுபட தொடங்கிவிட்டனர்.

இந்தநிலையில் சாஸ்திரி நகர் போக்குவரத்து பிரிவு போலீஸாருக்கு காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் பேசியுள்ளார். அப்போது அவர், கடந்த 20-ம் தேதி உத்தண்டியில் ஏதாவது வி.வி.ஐ.பி-யின் காரை பறிமுதல் செய்தீர்களா என்று விசாரித்துள்ளார். அப்போது போலீஸார் வி.வி.ஐ.பி காரா என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் போலீஸ் உயரதிகாரி, காரின் நம்பரைக் கூறியதும் போக்குவரத்து போலீஸார் ஆமாம் சார், அவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கா என்று கூறியதும் வாயடைத்து போய் உள்ளனர். அதன்பிறகே காய்கறி வாங்க ஊரடங்கு உத்தரவை மீறிய கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கின் கார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது.