ரஃபேல் விமானம் பற்றி பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர் கிண்டல்!
ரஃபேல் விமானத்தை பிரான்சிடம் இருந்து வாங்கிக்கொண்டு உலகின் வலிமையான விமானப்படை கொண்ட நாடு இந்தியா என்று பலரும் பேசி வருவதைப் பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா கிண்டல் செய்துள்ளார்.
இந்திய அரசு பிரான்சிடமிருந்து ரஃபேல் விமானங்களை வாங்கியுள்ளது. முதல் கட்டமாக ஐந்து ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளன. இன்னும் 31
விமானங்கள் வர வேண்டியுள்ளது. 36 ரஃபேல் விமானங்களை அதிக விலைக்கு வாங்கியதை மிகப்பெரிய சாதனையாக பா.ஜ.க-வினர் பேசி வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியின் போது இதே ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது 126 விமானங்கள் வாங்குவது, என்று முடிவானது. இதைப் பற்றி யாரும் வாய் திறப்பது இல்லை.
France has the most powerful air force in the world because it makes Rafael planes. India has the second most powerful air force in the world because it has now acquired 5 of these planes.
— Yashwant Sinha (@YashwantSinha) July 31, 2020
இந்த நிலையில் ரஃபேல் விமானங்கள் பற்றி பலரும் புகழ்ந்து பேசி வரும் நிலையில் பா.ஜ.க-வில் இருந்து விலகி செயல்படும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “பிரான்ஸ் உலகின் மிக அதிக ஆற்றல் கொண்ட விமானப்படை கொண்ட நாடு. ஏனெனில் அது ரஃபேல் விமானத்தை தயாரிக்கிறது. தற்போது இந்தியாவும் உலகின் அதிக ஆற்றல் கொண்ட விமானப்படை உள்ள நாடாக மாறியுள்ளது. ஏனெனில் இந்தியா ஐந்து ரஃபேல் விமானங்களை வாங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.
அதே போல் ரஃபேல் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது அதை சுகோய் விமானங்கள் பாதுகாத்து வரவேற்றன. இந்த சுகோய் விமானங்கள் தேவகவுடா ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்டது என்று கூறி, மோடியின் ரஃபேலாக இருந்தாலும் தேவகவுடாவின் சுகோய் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று சமூக ஊடகங்களில் பலரும் தகவல் பரப்பி வருகின்றனர்.