கோவையில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து… 5 பேர் உயிர் தப்பினர்…

 

கோவையில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து… 5 பேர் உயிர் தப்பினர்…

கோவை

கோவையில் ஓடும் காரில் திடீரென தீப்பற்றிய விபத்தில், திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் உள்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருப்பூர் மாவட்டம் அனப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் அதே பகுதியில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில், நிறுவனத்தில் பணிபுரியும் 4 வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக, அவர் நேற்றிரவு தனது காரில் கோவைக்கு அழைத்துச் சென்றார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் சுங்கச்சாவடி பகுதியில் சென்றபோது காரின் முன்பகுதியில் திடீரென தீப்பற்றியது. இதனை கண்ட, ஆனந்தன் உள்ளிட்ட அனைவரும் உடனடியாக காரில் இருந்து வெளியேற்றினார். அதற்குள்ளாக தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

கோவையில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து… 5 பேர் உயிர் தப்பினர்…

இதனால் சேலம் – கொச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த சூலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீவிபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.