வட்டார வளர்ச்சி அலுவலர் கொரோனாவால் உயிரிழப்பு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே செல்லும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திலும் பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பூந்தமல்லி, திருவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் திருவள்ளூர், பூந்தமல்லி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த 50 வயதான சாமிநாதன் என்பவர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 21 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாற்று சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். அரசு ஊழியர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.