பட்டாசு ஆலை வெடி விபத்து; ஆலை மேலாளர் கைது!
செங்குளம் ஊராட்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக, ஆலை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் – டி.கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளம் ஊராட்சியில் இயங்கி வந்த ராஜலட்சுமி பட்டாசு ஆலையில், கடந்த 23ம் தேதி திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் வேல்த்தாய், லட்சுமி, அய்யம்மாள், சுருளியம்மாள் உட்பட 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 3 பேரை மீட்ட தீயணைப்பு வீரர்கள் அவர்களை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர்களுள் லக்ஷ்மி, மகாலக்ஷ்மி என்னும் இரண்டு பெண்கள் சிகிச்சை பலன் இன்றி இரண்டு நாட்களுக்கு முன் உயிரிழந்தனர். இதனால் வெடி விபத்து பலி எண்ணிக்கை 7ஆக அதிகரித்தது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், பட்டாசு ஆலை மேலாளர் வைரமுத்துவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், ஆலை உரிமையாளர் சண்முகராஜனை போலீசார் தேடி வருகின்றனர்.