ஜவுளிக்கடை தீவிபத்து மீட்பு பணியின்போது உயிரிழந்த சிவராஜின் மனைவி தூக்கிட்டு தற்கொலை!
மதுரையில் தீபாவளியன்று ஜவுளிகடையில் ஏற்பட்ட தீ விபத்து மீட்பு பணியின்போது உயிரிழந்த சிவராஜின் மனைவி அங்கயற்கண்ணி திருப்பரங்குன்றம் அருகேயுள்ள ஸ்ரீனிவாச காலனியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்
மதுரையில் தீபாவளியன்று தனியார் ஜவுளிகடையில் ஏற்பட்ட தீ விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த தீயணைப்பு வீரர் சிவராஜ் என்பவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. சிவராஜின் மனைவி அங்கையற்கண்ணி (29) கணவர் இறப்பிற்கு பிறகு பாறைப்பட்டியில் உள்ள தனது கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சிவராஜ் மறைவிற்கு தமிழக அரசு சார்பாக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அறிவித்திருந்தனர். அந்த பணத்தை பிரிப்பதில் அங்கையற்கண்ணிக்கும் அவரது மாமனார் வீட்டிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கையற்கண்ணி மதுரை கீழகுயில்குடி அருகேயுள்ள சீனிவாசா காலனியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு தனது இரு குழந்தைகளுடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கணவன் மறைவால் மன உளைச்சலில் இருந்த அங்கையற்கண்ணி இன்று காலை 11 மணி அளவில் வீட்டில் தூக்கிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அங்கையற்கண்ணியை மீட்டு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் அங்கயற்கண்ணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.