சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம்! பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் மாற்றம்

 

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம்! பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் மாற்றம்

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் திருத்தம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் கோவில்பட்டி கிளைச் சிறைக்கு விசாரணைக் கைதிகளாக அழைத்துவரப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவரும் கீழே விழுந்து புரண்டதால் ஊமைக் காயம் ஏற்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மூன்று மருத்துவர்கள் முன்னிலையில் இருவருக்கும் பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம்! பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் மாற்றம்

நீதிமன்ற உத்தரவின்படி, மருத்துவர்கள் முன்னிலையில் வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இந்த அறிக்கைகளின் முடிவில், காவலர்கள் மீதான வழக்குப் பிரிவு மாற்றப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இருவரின் மரணம் குறித்து பென்னிக்ஸின் தாய் செல்வராணியும் காவல்துறையிடம் புகார் மனு அளித்துள்ளார். எனவே பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த உறுதியான விபரங்கள் தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது.