நவராத்திரியில் அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்ரீ சக்கர நவ ஆவாரணம் பூஜை!

 

நவராத்திரியில் அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்ரீ சக்கர நவ ஆவாரணம் பூஜை!

நவராத்திரியில் அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்ரீ சக்கர நவ ஆவாரணம் பூஜை! சக்தி வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது, ஸ்ரீ சக்கர வழிபாடு. ஆதிசங்கரர், உக்கிரமாக இருந்த அம்பிகைகளின் மூல ஸ்வரூபங்களுக்கு முன்பு, ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்து, அம்பிகையின் உக்கிரத்தை குறைத்து, சாந்த ஸ்வரூப அம்பிகையாக மாற்றியிருக்கிறார்.எந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்கரம் என்பது ஆன்றோர் வாக்கு. ஸ்ரீ சக்கரம் வைத்து வழிபடும் இடங்களில், மகாலட்சுமி குடியிருப்பாள் என்பது ஐதீகம். மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் ஸ்ரீசக்கரம். உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள். மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள். மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர். இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம். வீட்டில் எப்போதும் மன அமைதி, ஆரோக்யம், நிரந்தர வருமானம், சக்தி போன்றவை நிறைந்திருக்க, தவறாமல் ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபடலாம்.

நவராத்திரியில் அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்ரீ சக்கர நவ ஆவாரணம் பூஜை!

முக்காலங்கள், மும்மூர்த்திகள் அனைத்தும் அன்னையின் அமைப்புகளே. இதன்பொருட்டே திரிபுரசுந்தரியை மகாமேரு என்னும் மந்திரம், எந்திரம், தந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மூலம் வழிபடு கின்றனர். அனைத்து விதமான சக்கரங்களுக்கும் தலையாயது இந்த ஸ்ரீசக்கரம். அதன்பொருட்டே ஸ்ரீசக்கரத்தினை `ஸ்ரீசக்கர ராஜ’ என்றே மகான்கள் குறிப்பிடுகின்றனர். ஒன்பது நிலைகளைக் கொண்ட அம்பிகையின் ஸ்ரீசக்கரத்தினைப் பூஜிக்கும் முறை நவ ஆவரணம் என அழைக்கப்படுகிறது. ஆவரணம் என்பது சுற்று, அடைப்பு என பொருள்படுவதாகும்.

முதல் ஆவரணம்

இந்த ஆவரணத்தின் கிரகமாக வியாழ பகவான் விளங்குகிறார். முதல் ஆவரணத்தை வணங்குபவர்களுக்கு எல்லா செல்வங்களும் நிலைக்கும். தடைகள் நீங்கும். புத்தி பலம் கூடும்.

நவராத்திரியில் அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்ரீ சக்கர நவ ஆவாரணம் பூஜை!

இரண்டாவது ஆவரணம்

பதினாறு யோகினிகள் வாசம் செய்யும் தாமரைப் பூ ரூபம் இது. மனதின் தீய எண்ணங்கள் நீங்கும். அகம் தூய்மையாகும்.

மூன்றாவது ஆவரணம்

பூஜிப்பவரின் மனதை ஒருமுகப்படுத்தும் தேவதைகள் எட்டு தாமரை இதழ்களில் வாசம் செய்வதாக ஐதீகம். இவர்கள் பக்தியின் மேன்மையை பக்தர்களுக்கு அளிப்பவர்கள்.

நான்காவது ஆவரணம்

இந்த ஆவரணத்தில் 14 யோகினிகள் வாசம் செய்கின்றனர். சந்திரன் வடிவில் அன்னை காட்சி தருவாள். புத்திர பாக்கியத்தை அளிக்கும் ஆவரணம் இது.

ஐந்தாவது ஆவரணம்

பத்து கோணங்களில் பத்து யோகினிகள் வாசம் செய்கின்றனர். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் தரும்.

ஆறாவது ஆவரணம்

அன்னை சூரியனின் உருவில் இருக்கும் ஆவரணம் இது. பொறாமை இருளை அகற்றி, அருளின் ஒளியை ஏற்ற உதவும்.

ஏழாவது ஆவரணம்

புதன் கிரகம் அமையப்பெற்ற ஆவரணம். இந்த ஆவரணத்தை பூஜிப்பதின் மூலம் ஆத்ம ஞானம் பெருகும்.

எட்டாவது ஆவரணம்

மகா திரிபுரசுந்தரியாக அன்னை வீற்றிருக்கும் ஆவரணம் இது. அங்குசம், பாசம், கரும்பு வில் மற்றும் பாணம் ஆகிய அம்பாளின் நான்கு ஆயுதங்கள் இந்த ஆவரணத்தில் வழிபடப்படுகின்றன.

நவராத்திரியில் அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்ரீ சக்கர நவ ஆவாரணம் பூஜை!

ஒன்பதாவது ஆவரணம்

பேரின்பத்தை நிலைபெறச் செய்யும் ஆவரணம் இது. அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருக்கும் இந்த ஆவரணத்தைப் பூஜிப்பதின் மூலம் சகல நன்மைகளும் ஏற்படும். இந்த நவராத்திரியில் அம்பிகையை வழிபடும்போது அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்ரீ சக்கரத்தையும் வழிபட்டு, அன்னையின் பரிபூரண அருளை பெறுவோமாக.. ஓம் சக்தி! ஓம் ஆதிபராசக்தி!!!

நவராத்திரியில் அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்ரீ சக்கர நவ ஆவாரணம் பூஜை!

-வித்யா ராஜா