சாத்தான்குளம் தந்தை-மகன் சித்ரவதை மரணம்: 2 உதவி ஆய்வாளர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு!
சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வந்த உயர்நீதி மன்ற மதுரைகிளை தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என தெரிவித்துள்ளது.
முதல் தகவல் அறிக்கை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் முரண்பாடு இருக்கிறது. உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று கூறியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கானது சிபிசிஐடி கைவசம் சென்றுள்ளது. வழக்கு தொடர்பான அனைத்து இடங்களுக்கும் சென்று சிபிசிஐடி அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை-மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக புகாருக்குள்ளான எஸ்.ஐ.க்கள் கைது செய்யப்பட நெருக்கடி வலுக்கிறது. கொலை வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக உயர்நீதிமன்றக் கிளை தெரிவித்திருந்ததால் இரு எஸ்.ஐ.க்களும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.