கொரோனாவால் மனைவி பலி… வேதனையில் தந்தை – மகன் தற்கொலை!

 

கொரோனாவால் மனைவி பலி… வேதனையில் தந்தை – மகன் தற்கொலை!

தஞ்சாவூர்

ஒரத்தநாடு அருகே கொரோனாவால் மனைவி உயிரிழந்ததால், வேதனையில் தந்தை – மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் கனகராஜ்(58). இவரது மனைவி மீனா (46). இவர்களது மகன் மனோஜ்குமார் (25). கனகராஜ், கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இதற்காக அங்கேயே வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 1 மாதத்திற்கு முன்பு மீனாவுக்கு கொரோனா தொற்று ஏற்படவே, அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாட்களிலேயே அவர் உயிரிழந்த நிலையில், அங்கேயே இறுதி சடங்குகளும் மேற்கொள்ளப்பட்டது.

கொரோனாவால் மனைவி பலி… வேதனையில் தந்தை – மகன் தற்கொலை!

இந்த நிலையில், மீனாவின் அஸ்தியை அவரது சொந்த ஊரில் கரைப்பதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் திருவோணம் அடுத்த நரங்கிப்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு கனகராஜும், மனோஜ்குமாரும் வந்திருந்தனர்.தொடந்து, கடந்த 18ஆம் தேதி அன்று அவரது 30ஆம் நினைவு நாளையொட்டி நரங்கிபட்டியில் உள்ள குளத்தில் அஸ்தியை கரைத்தனர்.

இதனிடையே, மீனாவின் மறைவால் மனமுடைந்து காணப்பட்ட கனகராஜ், அவரது மகன் மோனோஜ்குமார் ஆகியோர் புதன் கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். திருவோணம் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.