குடும்ப தகராறில் தந்தை, 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை!

 

குடும்ப தகராறில் தந்தை, 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை!

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே குடும்ப தகராறில் தந்தை, 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அராக்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள்கள் ஹேமலதா (35). சாந்தி(31). சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி உயிரிழந்த நிலையில், செல்வராஜ் தனது மகள்களுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். மூத்த மகள் ஹேமலதா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

குடும்ப தகராறில் தந்தை, 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை!

மேலும், இளைய மகளுக்கும் திருமணம் ஆகாததால் செல்வராஜ் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரது வீடு பூட்டி கிடந்துள்ளது. மேலும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வெங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் கதவை உடைத்து சென்று பார்த்தபோது செல்வராஜ் மற்றும் அவரது மகள்கள் உடல் அழுகிய நிலையில் தூக்கில் சடலமாக தொங்கினர்.

இதனையடுத்து, போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டில் சோதனையிட்டபோது இறப்பதற்கு முன்பாக அவர்கள் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும், சொத்துக்களை தொண்டு அமைப்பிற்கு வழங்கும்படியும் தெரிவித்து உள்ளனர். இது குறித்து, வெங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.