அரியலூர் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயி அடித்துக்கொலை!

 

அரியலூர் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயி அடித்துக்கொலை!

அரியலூர்

அரியலூர் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் சிறுவளூரை சேர்ந்தவர் சாமிநாதன். விவசாயி. இவரது மனைவி செல்லபாங்கி. இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்து உள்ளது. இதனால், இரு குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று செல்லபாங்கி தோட்டத்தில் கருவேப்பிலை பறிக்க சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த கோவிந்தராஜின் மனைவி சின்னபொண்ணுவை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

அரியலூர் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயி அடித்துக்கொலை!

இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், அவரது மகன் தர்மராஜ் ஆகியோர் சாமிநாதனின் வீட்டிற்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், அவர்கள் சாமிநாதனை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில், படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சாமிநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து, அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் கோவிந்தராஜ், அவரது மகன் தர்மராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.