ஈரோடு- மஞ்சள் விலை கடும் சரிவு – விவசாயிகள் கலக்கம்

 

ஈரோடு- மஞ்சள் விலை கடும் சரிவு – விவசாயிகள் கலக்கம்

ஈரோடு

ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால்
விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
புவிசார் குறியீடு பெற்ற இந்த ஈரோடு மஞ்சள் அங்குள்ள கருமாண்டிசெல்லிபாளையம், செம்மாம்பாளையம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், ஈரோடு மற்றும் கோபி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் ஏலம் விடப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மஞ்சளின் விலை குவிண்டால் ஒன்று சுமார் 6 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவாக இருந்ததால் விவசாயிகள் தங்களது மஞ்சளை விற்பனைக்கு கொண்டு செல்வதில் தயக்கம் காட்டி வந்தனர்.

ஈரோடு- மஞ்சள் விலை கடும் சரிவு – விவசாயிகள் கலக்கம்

கொரோனா பாதிப்புக்கு பிறகு மஞ்சளின் விற்பனை சூடுபிடிக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், கடந்த சில நாட்களாக மஞ்சளின் விலை கடுமையான வீழ்ச்சி அடைந்து வருவது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து விலை குறைந்து கொண்டே வந்ததால் விவசாயிகள் மஞ்சளை ஏலத்துக்கு கொண்டு வருவதையும் தவிர்த்து வருகிறார்கள். இதனால் பெருந்துறை மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படும் மஞ்சள் மூட்டைகளின் எண்ணிகை ஆயிரத்தில் இருந்து 489 ஆக குறைந்துள்ளது. ஒரு குவிண்டால் தனிவிரலி மஞ்சள் ரூ.5,056 முதல் ரூ.5,959 வரையும், தனி கிழங்கு மஞ்சள் ரூ.4,961 முதல் ரூ.5,966 வரையும் விலைபோனது. .

ஈரோடு- மஞ்சள் விலை கடும் சரிவு – விவசாயிகள் கலக்கம்

கொரோனாவால் திருவிழாக்கள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடக்காமல் உள்ளதாலும், இலங்கையில் வெளிநாட்டு மஞ்சளை கொள்முதல் செய்ய தடை விதிக்கப்பட்டதாலும, மஞ்சள் விலை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஈரோடு மஞ்சள் விவசாயிகள், ஆந்திராவில் விவசாயிகளிடம் இருந்து மஞ்சளை குவிண்டாலுக்கு ரூ.6,800-க்கு கொள்முதல் செய்யும் அம்மாநில அரசு, அதனை குவிண்டாலுக்கு ரூ.4,500 முதல் ரூ.5000 வரை விற்பனை செய்கிறது. விலைக்குறைவு காரணமாக மற்ற மாநில வியாபாரிகள் வாங்குவதால், ஈரோடு மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஈரோடு- மஞ்சள் விலை கடும் சரிவு – விவசாயிகள் கலக்கம்

தீபாவளி பண்டிகையின்போது நுகர்வு அதிகரித்தால் மஞ்சளின் விற்பனையும் அதிகமாகும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர்கள், அவசர பண உதவி தேவைப்படும் விவசாயிகள் மட்டுமே மஞ்சளை விற்பனைக்கு கொண்டு செல்வதாகவும் கூறினர். மேலும், விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மஞ்சளை விவசாயிகள் பாதுகாத்து வருவதாகவும், இதனால் தரமான மஞ்சள் விற்பனைக்கு வரும்போது விலையும் உயரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.