“விதிகளை மீறி செயல்பட்ட 2 தொழிற்சாலைகளுக்கு சீல்” – ஆட்சியர்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு வைராபாளையம் பகுதியில் ஏற்கனவே
விதிகளை மீறி செயல்பட்டதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட தனியார்
சலவை தொழிற்சாலை, இரவு நேரத்தில் மாற்று மின் இணைப்பை பயன்படுத்தி தொழிற்சாலையை இயக்குவது திடீர் ஆய்வின்போது கண்டறியப்பட்டதாகவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அறிக்கையின் அடிப்படையில், அந்த தொழிற்சாலை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோன்று, பனங்காடு கிராமத்திலிருந்து விதிகளை மீறி திடக்கழிவினை இரவு நேரத்தில் லாரி மூலமாக எடுத்துச்சென்று கரூர் மாவட்டம், தென்னிலை கிராமத்தில் கொட்டிய தொழிற்சாலையும் நிரந்தரமாக மூடி சீல்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.