ஊரடங்கு விதிமீறல்- ஈரோட்டில் ஒரே நாளில் 1,005 வாகனங்கள் பறிமுதல்!

 

ஊரடங்கு விதிமீறல்- ஈரோட்டில் ஒரே நாளில் 1,005 வாகனங்கள் பறிமுதல்!

ஈரோடு

ஈரோட்டில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக நேற்று ஒரே நாளில் 1,005 வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், ரூ.5.50 லட்சம் அபராதமும் விதித்தனர்.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த கடந்த 24 ஆம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, ஈரோடு மாவட்ட எல்லைகளில் உள்ள 13 நிலையான சோதனை சாவடிகளிலும், மாநகர் பகுதிகளில் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, பஸ் நிலையம், ஜி.ஹெச். ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனையின்போது இ-பதிவு பெற்றிருந்தாலும் கடும் தணிக்கைக்கு பிறகே தொடர்ந்து செல்ல அனுமதித்து வருகின்றனர். அதேபோல் ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தும், முக கசவம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர்.

ஊரடங்கு விதிமீறல்- ஈரோட்டில் ஒரே நாளில் 1,005 வாகனங்கள் பறிமுதல்!

அதன்படி, ஊரடங்கின் 3ஆம் நாளான நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாமல் வந்த 300 பேருக்கு தலா ரூ.200 அபராதமும், சமூக இடைவெளியை பின்பற்றாத 20 பேர் மீது வழக்குப்பதிந்தும், போலீசார் அபராதம் விதித்தனர். மேலும், ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 962 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

குறிப்பாக நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 975 இருசக்கர வாகனங்களும், 30 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வாகன ஓட்டிகளிடம் ரூ.5.50 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் தொடர் நடவடிக்கையால் வெளியே சுற்றுபவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இன்று 4-வது நாளாக தொடர்ந்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்