திமுக அரசுக்கு அதிமுக தலைமை முக்கிய வேண்டுகோள்

 

திமுக அரசுக்கு அதிமுக தலைமை முக்கிய வேண்டுகோள்

சத்தியம் தொலைக்காட்சி மீது தாக்குதல் அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது போன்று தாக்குதல் நிகழா வண்ணம் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திமுக அரசுக்கு அதிமுக தலைமை முக்கிய வேண்டுகோள்

நேற்று முந்தைய தினம் சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர், தனது பேக்கில் இருந்து பட்டாக் கத்தி மற்றும் கேடயம் ஆகியவற்றை எடுத்து அலுவலக கண்ணாடிகளை உடைத்ததோடு அங்கிருந்த தொலைக்காட்சி ஊழியர்களை மிரட்னார். தகவலறிந்து நிகழ்விடத்துக்குவந்த போலீசார் அந்தநபரை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பல்வேறு காட்சி ஊடகங்கள் செய்திச் சேனல்கள் இயங்கி வருகின்றன. மதம் சார்புடைய காட்சி ஊடகங்களும், மக்கள் பத்தியில் ஆதரவைப் பெற்றுள்ளன. அப்படிப்பட்ட ஊடகங்களில் ஒன்றான “சத்யம் தொலைக்காட்சி” நிலையத்தை தனிநபர் ஒருவர் நேற்று (3.8.2021), கையில் ஆயுதங்களோடு தாக்கியதாக செய்திகள் வந்துள்ளன. இச்செயலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இதுபோன்ற தாக்குதலைத் தடுக்க தற்போதைய திமுக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த தொலைக்காட்சி நிலையத் தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பின்புலத்தை ஆராய்ந்து, இனியும் இதுபோன்ற குற்றச் செயல்கள் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.