“ஈரோட்டில் கொரோனா தடுப்பூசி, போதிய அளவு இருப்பு உள்ளது” – மாநகராட்சி ஆணையர் தகவல்
ஈரோடு
ஈரோட்டில் கொரோனா தடுப்பூசிகள் போதிய அளவு கையிருப்பு உள்ளதாக, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையொட்டி, மாநகராட்சி பகுதியில் கடந்த 2 நாடகளில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றாததாக 8 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதேபோல், முக கவசம் அணியாத, சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் என ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
.
இதுகுறித்து பேசிய பேசிய மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், ஈரோடு மாநகர் பகுதியில் தினசரி கொரோனா பாதிப்பு 150-க்கும் மேலாக அதிகரித்து உள்ளதாகவும், போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். காய்ச்சல் முகாம்களில் வைரஸ் தொற்று உறுதியானால், அதன் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறினார். மேலும், 60 வார்டுகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
மேலும், கருங்கல்பாளையம் காவிரி கரையில் உள்ள ஆத்மாவில் கொரோனாவால் இறப்பவர்களுக்கு என தனியாக எரியூட்டும் தகனம் மேடை அமைக்கப்பட்டு வருவதாகவும், ஒரு வாரத்தில் பணிகள் முடிவடையும் என்றும் ஆணையர் கூறினார். இதேபோல, மாநகர் பகுதிகளில் உள்ள அரசு, தனியார் மருததுவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், தேவையான டோஸ் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் கூறினார்.