இங்கிலாந்து உடனான 4வது டெஸ்ட்- ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தல்!

 

இங்கிலாந்து உடனான 4வது டெஸ்ட்- ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தல்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.

Image

முதலில் ஆடிய இந்திய அணி 61.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் கோலி 50 ரன்களும், தாகூர் 57 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஓக்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 290 ரன்களை குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஓலி பாப் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து தனது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது. இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி சிறப்பான தொடக்கம் தந்தனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் திணறினர். ஒருவழியாக ஜேம்ஸ் ஆண்டர்சன், கேஎல் ராகுலை 46 ரன்களில் ஆட்டமிழக்க செய்தார்.

Image

இதன்பிறகு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் புஜாரா வலுவான கூட்டணி அமைத்தனர். இந்தத் தொடரில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா சதத்தை தவறவிட்டுக் கொண்டே வந்தார். ஆனால் இன்று பிரமாதமாக ஆடி 204வது பந்தில் சிக்சர் அடித்து சதம் அடித்தார். ரோகித் சர்மா வெளிநாட்டில் அடிக்கும் முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 60 ஓவர்களில் 199 ரன்களை குவித்துள்ளது. ரோகித் 103 ரன்களுடனும் புஜாரா 48 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் முன்னிலை பெற்ற ஆடி வருகிறது.