சாலை விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

 

சாலை விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரம் மீது மோதிய விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் சந்திரசேகர்(49). இவர் தனது மனைவி தெய்வம்(45), மகன் சுகாஷ்(21) ஆகியோருடன் காரில் ஆந்திரா மாநிலம் காளகஸ்தி கோயிலுக்கு சென்றுள்ளனர். பொறியியல் கல்லூரி மாணவரான சுகாஷ் காரை ஓட்டிச்சென்றார். தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அடுத்த ஏலகிரியான் கொட்டாய் பிரிவு சாலை பகுதியில் சென்றபோது, திடீரென கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

சாலை விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

இதனை அடுத்து தறிகெட்டு ஓடிய கார் நெடுஞ்சாலையின் மையத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதி, சாலையோரத்தில் இருந்த மரங்களின் மீதும் மோதியது. இந்த விபத்தில் சுகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்திரசேகர் மற்றும் தெய்வம் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து, அதியமான் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.