“சாக்கடையை ஏன் சுத்தம் செய்யவில்லை?” – ஒப்பந்ததாரரின் தலையில் குப்பையை கொட்டிய எம்எல்ஏ!
சாக்கடையைச் சுத்தம் செய்யாமல் தாமதப்படுத்தியதால் அதற்கானஒப்பந்ததாரரின் தலையில் குப்பைகளைக் கொட்டி சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபட்டிருக்கிறார் சிவசேனா எம்எல்ஏ திலீப் லண்டே. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் திலீப்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர் சுத்தம் செய்யவில்லை என்றால் ஒப்பந்தத்தை ரத்துசெய்யாமல் ஏன் இப்படி செய்ய வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ளனர்.
தற்போது மும்பையில் தென்மேற்கு பருவமழை வெளுத்துவாங்கி வருகிறது. இச்சூழலில் இவரது தொகுதியான கண்டிவாலாவுக்குட்பட்ட பகுதிகளில் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து சாலைகளில் தேங்கியது. இதற்குக் காரணம் சாக்கடைகளை முறையாக தூர்வாராதது தான் காரணம் எனவும், இதனால் தொற்று அபாயம் ஏற்படலாம் என்றும் பொதுமக்கள் லண்டேவிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
பணத்தை வாங்கி கொண்டு சாக்கடையைச் சுத்தம் செய்யாத ஒப்பந்ததாரரை சாலைக்கு இழுத்துவந்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள். அதற்குப் பின் அங்கு தேங்கியிருந்த குப்பைகளை அவர் மீது கொட்ட வைத்திருக்கிறார். எதுவும் செய்ய முடியாமல் அந்த நபர் பதற்றத்தில் அமைதியாக இருந்தார். பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் அநாகரிமாக ஒருவரை நடத்துவது தான் எம்எல்ஏவுக்கு அழகா என கேள்வியெழுந்துள்ளது.
சர்ச்சைகளுக்குப் பின் அவர் வெளியிட்ட அறிக்கையில், “எனது தொகுதிக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் கடந்த சில காலமாகவே சாக்கடை தேங்கியிருக்கிறது. குப்பைகளும் சரியாக அகற்றப்படாமல் இருப்பதே அதற்குக் காரணம். பருவமழையால் கழிவுநீரும் மழை நீரும் சேர்ந்து சாலைகளில் தேங்கியது. ஆனால், கடமையைச் செய்யவேண்டிய ஒப்பந்ததாரர்கள் இந்தப் பக்கமே வருவதில்லை. அதை உணரவே இந்தத் தண்டனையும் வழங்கினேன்” என்றார்.