கிணற்றில் தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பலி!

 

கிணற்றில் தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பலி!

ஈரோடு

அந்தியூர் அருகே தண்ணீர் பாய்ச்ச சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து, மின்வாரிய கணக்கீட்டாளர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள கரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (50). இவர் சத்தியமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளர் ஆக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை மணிகண்டன், தனது விவசாய தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

கிணற்றில் தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பலி!

நீண்ட நேரமாகியும் மணிகண்டன் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், தோட்டத்திற்கு சென்று தேடி பார்த்தனர். ஆனால், அவரை காணாததால் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என கருதி, அந்தியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேர தேடலுக்கு பின் அவர்கள், கிணற்றிலிருந்து மணிகண்டனை சடலமாக மீட்டனர். தொடர்ந்து, உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அந்தியூர் போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.