சொத்து தகராறில் முதியவர் அடித்துக்கொலை – பேரன் கைது

 

சொத்து தகராறில் முதியவர் அடித்துக்கொலை – பேரன் கைது

திருச்சி

மணப்பாறை அருகே சொத்து தகராறில் 85 வயது முதியவரை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற பேரனை போலீசார் கைதுசெய்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வடக்கு சேர்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ராஜா. இவரது மகன் ராஜேஷ்குமார்(26). ராஜேஷ்குமாருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மதுப் பழக்கத்திற்கு அடிமையான ராஜேஷ், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து பெற்றோரிடம் சொத்துக்கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த ராஜேஷ், பெற்றோரிடம் சொத்துக்களை எழுதி தரக் கோரி தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனால் ராஜேஷுக்கும், அவரது தந்தை ராஜாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சொத்து தகராறில் முதியவர் அடித்துக்கொலை – பேரன் கைது

இதில் ஆத்திரமடைந்த அவர், பெற்றோர் மனைவி உள்ளிட்ட அனைவரையும் வீட்டிற்குள் வைத்து பூட்டியுள்ளார். அப்போது, வீட்டின் வெளியே இருந்த அவரது தாத்தா வேலு என்பவர், இதனை தட்டிகேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், தான் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் வேலுவை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.