‘சென்னையிலிருந்து நெல்லை’ 5 நாள்கள் சைக்கிளில் தொடர் பயணம்; அசர வைக்கும் 73 வயது முதியவர்!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள தெய்வநாயகப்பேரி என்னும் பகுதியை சேர்ந்த பாண்டியன் (73) பொதுமுடக்கம் போடுவதற்கு முன்னர் சென்னையில் இருக்கும் தன் மகன் வீட்டுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சில நாட்கள் அங்கேயே இருந்துள்ளார். அவருக்கு இ-பாஸ் எடுக்கும் நடைமுறை தெரியாததால் சைக்கிளிலேயே சொந்த ஊர் திரும்ப முடிவெடுத்த பாண்டியன், தனது பேரனின் சைக்கிளை எடுத்துக் கொண்டு கடந்த மாதம் 24 ஆம் தேதி சென்னையில் இருந்து கிளம்பியுள்ளார்.
சென்னையில் இருந்து நாங்குநேரிக்கு 657 கி.மீ தூரம் என்பதால் பயணத்தின் போது உணவுக்கு தேவையான பணத்தையும் கபசுர குடிநீரையும் கையில் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். இடை இடையே இரவில் கடைகளின் வாசலில் உறங்கி 5 நாட்கள் தொடர் பயணத்தின் பிறகு கடந்த 29 ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போதும் தன் வீட்டுக்கு செல்லாமல் சுடலைமாட சுவாமி கோவிலில் 15 நாட்கள் தன்னை தனிமைபடுத்திக் கொண்டு அதன் பிறகு வீட்டுக்கு சென்றிருக்கிறார். அவர் தற்போது எந்த பாதிப்பும் இன்றி நலமுடன் இருக்கிறார்.73 வயதில் 5 நாட்கள் தொடர்ச்சியாக சைக்கிளிலேயே பயணம் செய்த இவரது உடல் வலிமையும், மன உறுதியும் பலரும் வியக்கச் செய்துள்ளது.