பா.ஜ.க.விலிருந்து பலர் வெளியேற விரும்புகின்றனர்…. ஏக்நாத் கட்சே தகவல்
பா.ஜ.க.விலிருந்து பலர் வெளியேற விரும்புகின்றனர் என அந்த கட்சியிலிருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தாவிய ஏக்நாத் கட்சே தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர் ஏக்நாத் கட்சே. பா.ஜ.க.வின் பிரபல தலைவர்களில் ஒருவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கட்சியிலிருந்து வெளியேறி தேசியவாத காங்கிரசில் இணைந்தார். ஏக்நாத் கட்சே செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பா.ஜ.க.விலிருந்து பலர் வெளியேற விரும்புகின்றனர். ஆனால் அவர்களை தடுக்க மகாராஷ்டிரா அரசு கவிழும் என்று பா.ஜ.க. கூறுகிறது. ஆனால் மகாராஷ்டிரா அரசு வீழ்ச்சியடைப்போவதில்லை. நாங்கள் இந்த கட்சியில் (தேசியவாத காங்கிரஸ்) சேரும் போது இரண்டு விஷயங்கள் நிகழும், நாங்கள் அமைப்பை பலப்படுத்துவோம் மற்றும் வளர்ச்சிக்காக அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்.
முக்கியமாக, அரசின் உதவியுடன் எங்களது பகுதியில் வளர்ச்சி பணிகள் நடைபெறதான் முன்னுரிமை கொடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஏக்நாத் கட்சே தனது ஆதரவாளர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமையன்று தேசியவாத காங்கிரசில் இணைந்தார். ஏக்நாத் கட்சே பா.ஜ.க.விலிருந்து வெளியேறியது அந்த கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.