ஏற்றம் தரும் ஸர்வ ஏகாதசி விரதம்!

 

ஏற்றம் தரும் ஸர்வ ஏகாதசி விரதம்!

ஓம் நமோ நாராயணா! கோபுர தரிசனம் கோடி புண்ணியம்! புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில் வரும் சிறப்பான ஸர்வ ஏகாதசி இன்று. ஏகாதசி என்பது அமாவாசை மற்றும் பௌர்ணமியிலிருந்து 11வது நாள். பத்துநாள்கள் உடலும் மனமும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்க 11வது நாள் அதற்கு ஓய்வு தரும் விதமாக மேற்கொள்ளப்படும் விரதமே ஏகாதசி விரதம். எத்தனை விரதங்கள் இருந்தாலும், அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த விரதத்தை இன்று பலரும் மேற்கொள்வதில்லை. ஏகாதசி விரதத்தின் மகிமையை முதலில் அறிந்துகொள்வோம்.

ஏற்றம் தரும் ஸர்வ ஏகாதசி விரதம்!

திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பதால், மனித மனத்தின் மும்மலங்களான கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் நாம் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான இனிய வாழ்க்கை அமையும். மனதை ஒருநிலைப்படுத்தி முழுநாளும் விரதமிருப்பது மிகவும் விசேஷமானது. ‘ஏகாந்தத்தில் பேச்சின்றி ஏகாதசியில் வசி; ஏகாம்பர அருளமுதம் புசி’ என்பது ஆன்றோர்களின் அருள்வாக்கு.

ஏற்றம் தரும் ஸர்வ ஏகாதசி விரதம்!

ஏகாதசி விரதம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் உரைக்கிறது. எனவே இந்த நாளில், விருந்து, கேளிக்கை போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. ஓராண்டில் மொத்தம் 25 ஏகாதசிகள் வரும். ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகள் நிறைவேற்றிவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தேவைப்படும்போது மட்டும் தண்ணீர் குடிக்கலாம்.

உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம். விரதத்தை கடைபிடிக்கும்போது குளிர்ந்த நீர் குடிக்கத் தடையில்லை. மழை மாதங்கள், குளிர்மிக்க மாதங்களில் ஏழு முறை துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும். விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது. ஏகாதசி நாள் முழுவதும் ராம நாமத்தையோ கிருஷ்ண நாமத்தையோ, விஷ்ணு சஹஸ்ரநாமத்தையோ உச்சரித்து பெருமாளை வழிபடலாம்.

ஓம் நமோ நாராயணா!

-வித்யா ராஜா