எட்டுவழிச்சாலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

 

எட்டுவழிச்சாலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைக்காக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், இன்று மறு விசாரணை நடைபெற இருக்கிறது. எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் முன் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில்,
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை – சேலம் பயண நேரத்தை பாதியாக குறைக்கும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு மத்திய அரசு 10 கோடி நிதியை ஒதுக்கியது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் வெடித்தனர். இத்திட்டத்தினால் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என ஐந்து மாவட்ட விவசாய நிலங்களும், நீர்நிலைகளும், காடுகளும் அழியும் சூழல் உருவாகும் நிலையில், இத்தனையும் அழித்து பசுமை வழிசாலை என்றால் அதில் என்ன நியாயம் இருக்கிறது என்று கொத்தெழுந்து மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனால் போலீசாரின் உதவியுடன் மக்களை மிரட்டி, சாலை அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் எட்டுவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதிக்கக்கோரியும், இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பிலும், சமூக ஆர்வலர்கள் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் தமிழக அரசு நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இத்தீர்ப்பினை எதிர்த்து, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் ஆஜராகி வாதிட்ட அரசு வழக்கறிஞர், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எட்டுவழிச்சாலைத் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. அத்தைகைய திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்னரே சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும், அது வண்டியின் பின்னால் குதிரையை பூட்டுவதற்கு சமம் எனவும் தெரிவித்தார்.

இதைடுத்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில் இணை இயக்குனர் ஆஷிஷ்குமார் உச்சநீதிமன்றத்தில் பிரமானப் பத்திரம் தாக்கல் செய்தார். அதில், 2006-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையின்படி, நிலத்தை கையகப்படுத்த சுற்றுச்சூழல் முன் அனுமதி தேவையில்லை. நிலம் கையகப்படுத்துவதற்கு நம்பத் தகுந்த ஆவணங்களே போதுமானவை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டுத்தான் எட்டுவழி சாலைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், 7.8.2020 இன்று இவ்வழக்கின் மீதான மறு விசாரணை நடைபெறுகிறது.