நாங்க ஒன்னும் காப்பி அடிக்கல… ஸ்டாலின் தான் எங்கள காப்பி அடிக்கிறார்- முதல்வர் பழனிசாமி
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக – திமுக கட்சிகள் போட்டிப்போட்டுக்கொண்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் பயிர்க்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். அதை தொடர்ந்து முதல்வர் பழனிசாமி தேர்தலுக்கு முன்பே விவசாயக்கடனை தள்ளுபடி செய்தார். இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வதை தான், எடப்பாடி பழனிசாமி செய்துவருவதாக விமர்சித்தார்.
இதனிடையே இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “பல்வேறு நெருக்கடிகள், சோதனைகளைத் தாண்டி 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளேன். எதிர்க்கட்சித் தலைவர் உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார். ஸ்டாலின் சொல்லித்தான் நான் செய்வதாக அவர் உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார். புயல், மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கையை ஏற்றதான் பயிர்க்கடனும் தள்ளுபடி செய்யப்பட்டது. மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது” எனக் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆட்சியில் இல்லாதவர்கள் எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், ஆட்சியிலிருப்பவர்கள் ஒரு திட்டத்தை சிந்தித்து, கணக்கிட்ட பிறகு தான் கூற முடியும். அப்படி, எங்கள் அரசு கணக்கிடும் போது அதை எதிர்கட்சி தலைவர் தெரிந்து கொண்டு கூறிவிட்டு, அவர் சொல்லி செய்வதைப்போல தவறாக பரப்பி வருகிறார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.