விவசாயிகளின் கடனை ரத்து செய்தது ஏன்? முதல்வர் பழனிசாமி விளக்கம்
கட்சி பார்த்து கடனை தள்ளுபடி செய்யவில்லை, விவசாயிகளின் கஷ்டத்தை பார்த்துதான் தள்ளுபடி செய்தேன் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி கலந்துரையாடினார். தொடர்ந்து அம்பத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ வாக்குறுதியையும் செய்வோம், மக்களின் தேவையையும் செய்வோம். சொன்னதையும் செய்வோம். சொல்லாததையும் செய்வோம். இன்றைய தேவை பயிர்க்கடன் தள்ளுபடி. ஆகையால் அதனை செய்தோம். மற்றப்படி ஸ்டாலின் சொன்னதற்காகயெல்லாம் பயிர்கடனை தள்ளுபடி செய்யவில்லை. திமுகவினர் வாக்குறுதி அளிப்பார்கள் ஆனால் அதனை நிறைவேற்றமாட்டார்கள்.
வறட்சிக்காக நிவாரணம் வழங்கிய ஒரே மாநிலம் தமிழகம்தான். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பொன்னேரியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். வேளாண் பெருமக்கள் கனமழையால் பாதிக்கப்பட்டாலும், புயலால் பாதிக்கப்பட்டாலும், வறட்சி ஏற்பட்டாலும் நிவாரணம் கொடுக்கும் ஒரே அரசு அதிமுக அரசு. எப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் நாங்கள் அவர்களுக்கு கைத்தூக்கி உதவுவோம். விவசாயிகள் மின்கட்டணத்தை குறைக்க சொன்னதற்காக சுட்டுத்தள்ளிய கட்சி திமுக” எனக் கூறினார்.