வெளிநாட்டில்கூட போடாத உயர்ரக சாலையை திநகரில் போட்டுள்ளோம்: முதல்வர் பழனிசாமி

 

வெளிநாட்டில்கூட போடாத உயர்ரக சாலையை திநகரில் போட்டுள்ளோம்: முதல்வர் பழனிசாமி

எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சென்னை வடக்கு மாவட்ட கழகம் சார்பாக சென்னை அசோக் நகரில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “எம்ஜிஆர் என்று சொன்னாலே அவர் தெய்வத்திற்கு சமமானவர். மக்களுக்காக வாழ்ந்து மறைந்து சென்றவர். குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் தெரிந்தவர் எம்ஜிஆர். கட்சி தொடங்கினால் எம்ஜிஆரின் பெயரை மட்டுமே சொல்லி தொடங்கும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. நாங்கள்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா வாரிசு என்ற நிலையில்தான் தற்போது இருக்கிறோம். குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் செய்து வருபவர்கள் தான் அதிமுகவை விமர்சனம் செய்து வருகிறார்கள். திமுக ஒரு குடும்ப கட்சி, கார்பரேட் கம்பெனி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவை அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறது இந்த அரசு. அதிமுக ஆலமரம் போல் விரிந்து மக்களுக்கு நிழல் கொடுத்து வருகிறது.

எம்ஜிஆர் சிறுவயதில் வறுமையில் வாடியதால் அவர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். உயிரோட்டம் உள்ள திட்டத்தை கொண்டு வந்தவர் எம்ஜிஆர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தத் தவறி விட்டதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டிவருகிறார். தற்போது ஸ்டாலினை பார்த்து கேட்கிறேன் கேரள டெல்லியை விட தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக அளவு ஆர்டிபிசியார் பரிசோதனை மேற்கொண்ட மாநிலம் தமிழகம் தான். மருத்துவ முகாம், அம்மா உணவகத்தில் இலவச உணவு, அம்மா மினி கிளினிக், ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம், இந்த கொரோனா காலத்தில் ஏரிகள், குளங்கள், குட்டைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளன. அனைத்திலும் நீர் தேக்கி வைத்துள்ளோம். கிருஷ்ணா நதிநீர் திட்டத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். சென்னையின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய அடித்தளமிட்டவர் எம்.ஜி.ஆர்.

வெளிநாட்டில்கூட போடாத உயர்ரக சாலையை திநகரில் போட்டுள்ளோம்: முதல்வர் பழனிசாமி

கழிவுநீரை சுத்திகரித்து அதனை தொழிற்சாலைக்கு வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்ததை ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு பாலங்களை கட்டி கொடுத்து இருக்கிறோம். ஸ்டாலின் மேயராக, துணை முதல்வராக இருந்தபோது மக்களுக்கான பணி எதுவும் செய்யவில்லை. தண்ணீர் இருப்பதாக கூறுகிறார், ஸ்டாலின் மேயராக இருந்த போது தண்ணீர் தேங்கமால் எந்த நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்ட இருந்தார். எத்தனை மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். எங்கள் அரசை பொருத்த வரை மக்கள் தான் எங்களது எஜமானர்கள். சென்னை மக்களுக்காக எத்தனையோ திட்டங்களை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் எதையுமே செய்யவில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். தவறான தகவலை தெரிவித்து மக்களிடத்தில் அனுதாபம் தேடி வருகிறார் ஸ்டாலின். வெளிநாட்டில் கூட போட முடியாத அளவிற்கு தியாகராய நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி சாலை அமைத்திருக்கிறோம்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் 8 மேம்பாலங்களை கட்டிக் கொடுத்த அரசு அதிமுக அரசு. சுமார் 3000 சாலைகளில் மழைநீர் தேங்காமல் சீர் செய்தது அதிமுக அரசு. 954 கி.மீ வடிகால் வசதி செய்து கொடுத்துள்ளோம். பல்வேறு மேம்பால பணிகளும் நடைபெற்று வருகின்றன. 60 கி.மீ தொலைவில் வெளிவட்டச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதால் தவறான தகவல்களை தெரிவித்து அனுதாபம் பெற முயற்சிக்கிறார் ஸ்டாலின். அதற்காகவே இவ்வளவு புள்ளி விபரங்களைத் தெரிவித்துள்ளேன். ஸ்டாலினுக்கு பார்வைக்கோளாறா அல்லது ஞாபகத்தில் கோளாறா என்று தெரியவில்லை எத்தனை திட்டம் கொண்டுவந்தாலும் எதையும் செய்யவில்லை” என்று கூறினார்.