திரைப்படங்களில் ஜொலித்த நடிகை குஷ்பு இன்று அரசியலிலும் ஜொலித்துக்கொண்டிருக்கிறார் – முதல்வர் பழனிசாமி
நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் எழிலன், அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு, அமமுக சார்பில் என்.வைத்தியநாதன் ஆகியோர் களம் காணுகின்றனர்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்புவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “நடிகை குஷ்பு, திரைப்படங்களில் நட்சத்திராமாக ஜொலித்தவர் இன்று அரசியலிலும் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவர் சிறந்த பேச்சாளர், திறமையானவர். குஷ்பு வெற்றிப்பெற்றால் ஆயிரம் விளக்கு தொகுதி மக்களுக்கு நன்மைகள் கிடைப்பது மட்டுமின்றி, இந்த நாடு வளம் பெறும்.
தொகுதியில் ஏதேனும் பிரச்னை என்றால் டெல்லிவரை சென்று போராடி உரிமைகளை பெற்றுதருவார். தமிழகத்திற்கு நல்ல திட்டங்கள் கிடைக்க வேண்டுமென்றாம் மத்திய அரசின் அனுமதியும் நிதியும் வேண்டும், அதனை பெற்றுதர பாஜக வேட்பாளர்கள் சட்டசபையில் இருக்க வேண்டும். திமுகவை போல் பாஜகவிலும் அதிமுகவிலும் வாரிசு அரசியல்வாதிகள் இல்லை. அதிமுகவும், பாஜகவும் உழைக்கின்றவர்களுக்கு பதவிகளைக் கொடுத்து அழகு பார்க்கும் கட்சிகளே” எனக் கூறினார்.