அத்தியின் ஆச்சரிய பலன்கள்!

 

அத்தியின் ஆச்சரிய பலன்கள்!

பழங்கள் அனைத்தும் ஊட்டச்சத்து நிறைந்தது என்று நமக்குத் தெரியும். இவற்றில் சில குறிப்பிட்ட பழங்களை பழங்களின் அரசன், அரசி, ஊட்டச்சத்து சுரங்கம் என்று எல்லாம் வர்ணிப்பது வழக்கம். பல மத புத்தகங்களில் இடம் பெற்ற கனி என்றால் அதில் அத்தி முதல் இடத்தைப் பிடிக்கும். ஆதாம் ஏவாள் கதையில் ஏவாள் சாப்பிட்டது ஆப்பிள் இல்லை, அத்திதான் என்று சிலர் கூறுகின்றனர். இஸ்லாமியர்களின் புனித நூலான திருக் குரானில் சொர்கத்தின் கனி என்றே அத்தியை அழைக்கின்றனர். அப்படிப்பட்ட அத்திப் பழத்தின் பலன்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

அத்தியின் ஆச்சரிய பலன்கள்!

அத்தியில் பல வகைகள் உள்ளன. வகைகள் வெவ்வேறாக இருந்தாலும் பலன்களில் பெரிய மாறுதல்கள் இல்லை என்றே ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தியின் பழம் மட்டுமின்றி அதன் பிஞ்சு, இலை, பட்டை, பால் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது என்கிறது சித்த மருத்துவம். உலரவைத்துப் பொடித்த அத்திமர இலை பித்தம் மற்றும் பித்தத்தால் வரும் நோயை போக்குமாம். அடிபட்டு நிற்காமல் ரத்தம் வடியும்போது அத்திமர இலை பொடியை போட்டால் விரைவில் ரத்தம் உறைய ஆரம்பிக்கும். அத்தி இலையை வெந்நீரில் போட்டு ஊற வைத்து வாய் கொப்புளித்தால் வாய்ப்புண், ஈறு பிரச்னைகள் சரியாகும்.

தோராயமாக 40 கிராம் எடை கொண்ட ஒரு அத்திப் பழத்தில் 30 கலோரி, 8 கிராம் கார்போஹைட்ரேட், ஒரு கிராம் நார்ச்சத்து மற்றும் தாமிரம், பொட்டாசியம், மக்னீஷியம், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், கே என ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன.

அத்தி வயிறு செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளைத் தடுக்கிறது. ஐ.பி.எஸ் எனப்படும் இரிட்டபிள் பவுள் சிண்ட்ரோம் பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்கிறது.

ரத்தத்தில் எச்.டி.எல் என்ற நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது. உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கச் செய்கிறது. இதன் காரணமாக இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.

பண்டைய கிரேக்க நாகரீகத்தில் குழந்தையின்மை பிரச்னைக்கு வழங்கப்படும் மருந்தாக அத்தி இருந்துள்ளது. தற்போதும் கூட நம்முடைய பாரம்பரிய மருத்துவமுறைகளில் குழந்தையின்மை தம்பதிகள் அத்திப்பழம் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகின்றனர்.

அத்திப்பழம் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, விந்தணுக்களின் இடப் பெயர்வு திறன் அதிகரிக்கச் செய்யும்.

பெண்கள் அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வருவதன் மூலம் மாதவிலக்கு தொடர்பான பாதிப்புகள் சரி செய்யப்படும். ஹார்மோன் சமச்சீரின்மை சரியாகிறது. இதன் காரணமாக குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

நார்ச்சத்து நிறைந்த பழம் என்பதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் சிறந்த உணவாக இது இருக்கிறது.