வாயில் மாஸ்க் அணிந்திருந்ததால் தவறுதலாக ஒருமையில் பேசிவிட்டேன் – துரைமுருகன் விளக்கம்

 

வாயில் மாஸ்க் அணிந்திருந்ததால் தவறுதலாக ஒருமையில் பேசிவிட்டேன் – துரைமுருகன் விளக்கம்

வேலூரில் நேற்று திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துரைமுருகன் கலந்துகொண்டார். கூட்டத்திற்கு பின்னர் பேட்டியளித்த அவரிடம் கூட்டணி குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர், “கூட்டணியில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படலாம். அப்போதுதான் எவன் எவன் எங்கிருக்கிறான் என தெரிய வரும்” என தெரிவித்தார். இதற்கு கூட்டணி கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன.

இதுகுறித்து தற்போது விளக்கமளித்து துரைமுருகன் , “நேற்று (2.10.2020) கிராம சபைக் கூட்டத்தின் முடிவில், பத்திரிகையாளர் சந்திப்பின்போது, என்னை சந்தித்த செய்தியாளர்கள் “தி.மு.க. கூட்டணியில் யார் யார் இருப்பார்கள்?” என்று ஒரு கேள்வி கேட்டார்கள். அதற்கு, “இப்பொழுது எதையும் அறுதியிட்டு, இறுதியிட்டு சொல்ல முடியாது. தேர்தல் காலங்களில் இறுதி நேரத்தில்கூட, கட்சிகள் இடம் மாறுவது உண்டு. அப்படி, இங்கே இருப்பவர்கள் அங்கே போவதும், அங்கே இருப்பவர்கள் இங்கே வருவதுங்கூட கடந்த காலங்களில் நடைபெற்றிருக்கிறது” என்றுதான் நான் கூறினேன்.

வாயில் மாஸ்க் அணிந்திருந்ததால் தவறுதலாக ஒருமையில் பேசிவிட்டேன் – துரைமுருகன் விளக்கம்

வாயில், ‘மாஸ்க்’ அணிந்து பேசிக் கொண்டிருந்த காரணத்தால், சில வார்த்தைகள் தவறுதலாக வந்திருக்கலாம். அதனை நான் ஒருமையில் பேசியதாக சில பத்திரிகைகள் வெளியிட்டிருப்பதாகவும், அதனால், எங்களிடத்தில் ஆழ்ந்த உறவோடு இருக்கக்கூடிய சிலர் வருத்தம் அடைந்திருப்பதாகவும் எனக்கு செய்திகள் வந்தது. நான் அவ்வாறு கூறவில்லை. அப்படி நான் கூறியதாக எடுத்துக் கொண்டாலும், அதற்காக நான் மெத்த வருத்தப்படுகிறேன்.

பொதுவாக, நான் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, எனது பேச்சு மற்றும் நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டிருக்கிறேன். எனவே, யாருடைய உள்ளமாவது வருத்தப்பட்டிருந்தால், அதற்காக நான், மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால், எல்லோரிடத்திலும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நீண்டகாலமாக என்னை அறிந்தவர்கள், அப்படி நினைக்கமாட்டார்கள் என்று கருதுகிறேன். இருந்தாலும், இனி இப்படி நிகழா வண்ணம் நானும் நடந்து கொள்வேன்” எனக் கூறினார்.